
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை வழக்கு, தற்போது மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. பாஸ்கர் கன்னவார் என்ற முதியவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில், அவரது மருமகள் ஷெரினுக்கு வழங்கப்பட்ட மூன்று ஆயுள் தண்டனைகள் ரத்து செய்யப்பட்டு, நன்னடத்தை காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டிருப்பதுதான் இந்த புதிய சர்ச்சைக்கு காரணம்.
பாஸ்கர் வீட்டில் கொல்லப்பட்டபோது, அவரது மகன், மருமகள் ஷெரின் மற்றும் குழந்தை மட்டுமே இருந்தனர். தனி அறையில் பாஸ்கர் இருந்ததால், கொலை சம்பவம் உடனடியாக வெளியில் தெரியவில்லை. பணிப்பெண் வந்து பார்த்த பின்னரே, அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. விசாரணையில், மருமகள் ஷெரினின் தொலைபேசி பதிவுகள் சந்தேகத்தை கிளப்பியது. பாஷித் அலி என்ற நபருடன் அவர் அடிக்கடி பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், ஷெரினுக்கு பாஷித் அலியுடன் இருந்த கள்ள உறவும், மாமனார் பாஸ்கர் இந்த உறவுக்கு தடையாக இருந்ததும் தெரிய வந்தது. சொத்துக்களை அபகரிக்கவும், கள்ளக்காதலை தொடரவும் ஷெரின் தனது காதலன் பாஷித் அலி மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மாமனாரை கொலை செய்தது அம்பலமானது. இந்த வழக்கில் ஷெரினுக்கும், மற்ற குற்றவாளிகளுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
ஆனால், தண்டனை பெற்று சிறை சென்ற ஷெரினின் வாழ்க்கையில் அடுத்த கட்ட நாடகம் அரங்கேறியுள்ளது. சிறைத்துறை அதிகாரிகளையும், அரசியல் செல்வாக்கு மிக்க நபர்களையும் தன் வசப்படுத்தி, சிறைக்குள்ளேயே ஷெரின் ராஜ வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முக்கியமாக, சிறைத்துறை டி.ஜி.பி-யுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும், அமைச்சர்கள் வரை அவருக்கு சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக, கைதிகளின் நன்னடத்தை அறிக்கையின் அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கம். ஆனால், ஷெரினின் விடுதலை மட்டும் மின்னல் வேகத்தில் நடந்திருப்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் கைதிகள் பலர் விடுதலைக்காக காத்திருக்கும் நிலையில், ஷெரினுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்தது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
ஷெரின் சிறையில் இருந்தபோது, விதிகளை மீறி பல சலுகைகள் பெற்றதாக சக கைதிகள் குற்றம் சாட்டுகின்றனர். யூனிபார்ம் அணியாமல் சுடிதாரில் வலம் வந்தது, சிறை உணவை தவிர்த்து வெளியே இருந்து உணவு வரவழைத்தது, செல்போன் பயன்படுத்தியது என பல விதிமீறல்கள் நடந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பரோலில் சென்ற நாட்களும் கணக்கிட்டால், 14 வருட தண்டனையில் ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் வெளியில் உலாவி உள்ளார்.
ஷெரினின் விடுதலைக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கியதில் சந்தேகம் இருப்பதாகவும், அதிகாரிகளின் அறிக்கைகள் ஷெரினுக்கு சாதகமாக மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொலை குற்றவாளிக்கு கருணை காட்டுவது எந்த விதத்தில் நியாயம்? அதிகார துஷ்பிரயோகம் செய்து ஷெரினை விடுதலை செய்தது சரியா? என்ற கேள்விகள் பொது மக்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. உண்மையான நன்னடத்தை சிறையில் இருந்ததா? அல்லது அதிகார வர்க்கத்தின் தயவால் உருவாக்கப்பட்டதா? என்ற மர்ம முடிச்சு இந்த விடுதலை சர்ச்சையில் நீடிக்கிறது.